இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல்: முன்னாள் தலைமை தளபதியிடம் சிபிஐ விசாரணை

பிடிஐ

இத்தாலியைச் சேர்ந்த பின்மெக்கனிக்கா குழுமத்தின் ஒரு அங்கமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் (இங்கிலாந்து) நிறுவனத்திடமிருந்து விவிஐபி-களுக்கான ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்தியாவில் உள்ளவர்களுக்கு இத்தாலி நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி, அவரது உறவினர்கள், ஐரோப்பிய இடைத்தரகர்கள் உட்பட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பாக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்காக ஹெலிகாப்டர் திறன் தொடர்பான விதிமுறைகளில் சில திருத்தங்களை செய்ததாக தியாகி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு தியாகிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதன்படி நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தியாகி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுபோல அமலாக்கத் துறையும் தியாகிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், அவர் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

முன்னதாக இந்த வழக்கு தொடர் பாக விமானப்படை துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலிடம் கடந்த சனிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தியாகி, குஜ்ராலிடம் கடந்த 2013-ம் ஆண்டும் சிபிஐ விசாரணை நடத்தியது. எனினும், இத்தாலி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்துவது அவசியம் என சிபிஐ கருதுகிறது.

SCROLL FOR NEXT