மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதைச் சுட்டிக்காட்டி, “இந்தியர்களில் 80% பேர் அசைவம் சாப்பிடுபவர்கள்” என்று கூறி மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்வதேசத் தலைவர்களுக்கு இந்தியாவின் சமையல் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை எடுத்துரைக்க இந்த விருந்து அளிக்கப்பட்டது. இதில் நாட்டின் ‘ஸ்ரீ அன்னா’ சிறுதானியப் பெருமை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வெளிப்படுத்தும் சைவ உணவுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதன்படி காண்ட்வி, பனீர் லபாப்தார், குக்சி மார்மிக், சிறுதானிய புலாவ், காளான் கலாவுட்டி மற்றும் ஜிலேபி போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன.
அதிகாரப்பூர்வ உணவுப் பட்டியலில் அசைவ உணவுகள் இல்லாதது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “தரவுகளின்படி 80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்; இந்திய அசைவ உணவுகள் மட்டுமன்றி தனது சகோதரி சமைக்கும் சோலே பட்டுரே (வடஇந்தியாவின் பாரம்பரிய சைவ உணவு வகை) உணவும் மிகவும் சுவையானது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ராகுல் காந்தி தனது 80 சதவீதப் புள்ளிவிவரத்துக்கு நேரடி ஆதாரம் எதையும் குறிப்பிடாதபோதிலும், தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி 15 முதல் 49 வயதுடைய இந்திய ஆண்களில் 83.4% பேரும், பெண்களில் 70.6% பேரும் குறைந்தபட்சம் எப்போதாவது மீன், கோழி அல்லது இறைச்சியை உண்பது தெரியவருகிறது.
இணையத்தில் சிலர் இந்த முடிவைக் கேள்விக்குள்ளாக்கிய நிலையில், மற்றவர்கள் சைவ உணவுப் பட்டியலை இந்தியாவின் உணவுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நகர்வாகப் பாராட்டினர்.