ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 8 நக்சலைட்கள் ஆயுதங்களுடன் சரண் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பிஜாப்பூர் போலீஸாரிடம் 5 பெண்கள் உட்பட 8 நக்சலைட்கள் ஆயுதங்களுடன் சரண் அடைந்துள்ளனர். இவர்களை பற்றிய தகவலுக்கு மொத்தம் ரூ.49 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. சரண் அடைந்த அனைவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் பிஜாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் நாராயண்பூரையும் மற்றொருவர் சுக்மாவையும் சேர்ந்தவர் ஆவார். என்றாலும் இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் அமைப்பால் ஜார்க்கண்டில் பணியமர்த்தப்பட்டு அங்கு செயல்பட்டு வந்தனர்.
சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டும் பழங்குடியினர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் காரணமாகவும் இவர்கள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.