திருமண ஊர்வலம் ஒன்று நகரும் பந்தலுக்குக் கீழ் ஒய்யாரமாகச் செல்லும் வீடியோ ஒன்று இணையவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியத் திருமணங்கள் எப்போதுமே கொண்டாட்டங்கள் நிறைந்தவை. பணமதிப்பிழப்பு, பெருந்தொற்று, பணவீக்கம், என என்ன நடந்தாலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு திருமணங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில் நகரும் பந்தலுக்குக் கீழ் திருமண ஊர்வலம் ஒய்யாரமாகப் போகும் வீடியோ ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.
தேவயானி கோஹ்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண ஊர்வல வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இதனால் தான் இந்தியா 'கண்டுபிடிப்புகளின் பூமி' என்று அழைக்கப்படுகிறது. எளிமையான ஜூகாத், வெயிலின் கொடுமையை தணிக்க இந்தியர்கள் ஒரு வழிகண்டுபிடித்து விட்டார்கள் என்று எழுதி ஊர்வல வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் செல்லும் மணமகன் அழைப்பு ஊர்வலத்தில் கூடவே ஒரு நகரும் பந்தல் ஒன்று செல்கிறது.
இந்த வீடியோவை இச்செய்தியை பதிவு செய்தபோதே 17 ஆயிரத்துக்கும் அதிமான பேர் பார்த்துள்ளனர். பலர் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.2 ஊர்வலம் செல்லும் பாதையில் மின் கம்பிகள் தெளிவாகத் தென்படுகின்றன. இதனால் இப்படியாக நகரும் பந்தலை எடுத்துச் செல்வது ஆபத்தாக அமையலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.