கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் ஓமன் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். சம்பவம் குறித்து அந்நாட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஓமன் நாட்டுல் பதர் அல் சமா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சிக்கு ராபர்ட் கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார்.
இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறும்போது, "கேரள மாநிலம் கருகுட்டியைச் சேர்ந்த ராபர்ட் - சாபி தம்பதியின் மூத்த மகள் சிக்கு ராபர்ட். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பதர் அல் சமா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் லின்சன் தாமசும் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவுப் பணிக்கு வர வேண்டிய சிக்கு வெகு நேரமாகியும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனையடுத்து இரவு 11 மணியளவில் வீட்டுக்குச் சென்று பார்த்த லின்சன் மனைவி சிக்கு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்துள்ளார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிக்கு வீட்டின் அருகே வசித்து வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர் ஞாயிறு அல்லது திங்கள் கிழமை சிக்குவின் உடல் கேரளாவுக்கு அனுப்பப்படும். சிக்கு மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்" என்றனர்.