பாரத் மாதா கி ஜே முழக்கமிடாதவர்களின் தலைகளை வெட்டி இருப்பேன், சட்டத்தை மதிப்பதனால் அவ்வாறு செய்யவில்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் ஆவேசப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம் ரோதக்கில், ‘சத்பாவனா சம்மேளனம்’ நடந்தது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் பேசியதாவது:
நான் இந்த மண்ணின் சட்டத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்கிறேன். இல்லையென்றால், ‘பாரத மாதா கீ ஜே’ சொல்ல மறுக்கும் லட்சக்கணக்கானவர்களின் தலைகளை வெட்டி இருந்திருப்பேன்.
சிலர் தொப்பி போட்டு கொண்டு, என் கழுத்தை வெட்டினாலும் பாரத மாதா கீ ஜே சொல்ல மாட்டேன் என்கின்றனர். இந்த நாட்டில் சில சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் மதிக்கிறோம். இல்லையென்றால், நம் நாட்டை அவமதிப்பவர்கள் ஒருவர் இல்லை, ஆயிரம் பேர் இருந்தாலும், லட்சம் பேர் இருந்தாலும், அவர்களின் தலைகளை வெட்டும் அளவுக்கு நமக்கு பலம் உள்ளது.
பாரத மாதா கீ ஜே என்று முழக்கமிடுவது நமது மண்ணின், நமது தாய்நாட்டின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவது. இதற்கு எதிராக எந்த மதமாவது இருந்தால், அது நாட்டுக்கு எதிரானது. பாரத மாதா கீ ஜே என்பது தாய்நாட்டை பற்றியது. அதற்கும் எந்த மதத்துக்கும் சம்பந்தம் இல்லை.
பாரத மாதா கீ ஜே என்று சொல்வது எந்த மதத்தின் வழிபாடும் அல்ல. இது நாட்டுக்கு நாம் செலுத்தும் மரியாதை, பெருமை, கவுரவம். நாம் இந்துவாக, சீக்கியராக, முஸ்லிமாக, கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால், நாம் எல்லோரும் இந்தியர்கள்.
இவ்வாறு ராம்தேவ் பேசினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி சமீபத்தில் கூறுகையில், ‘‘என் கழுத்தில் கத்தி வைத்து தலையை வெட்டுவேன் என்று மிரட்டினாலும், பாரத மாதா கீ ஜே சொல்ல மாட்டேன்’’ என்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெயர் குறிப்பிடாமல் ராம்தேவ் இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஆச்சார்யா தேவ் விராட், செஸ் விளையாட்டு வீரர் அனுராதா பெனிவால், பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.