புதுடெல்லி: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றம் மற்றும் அதிகாரத்தில் கவனம் செலுத்துவோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர்நரேந்திர மோடி நேற்று தனதுட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு எனது வாழ்த்துக்கள். மகளிர் தினத்தில் பெண்களின் சக்தி மற்றும் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளுக்கு தலைவணங்குகிறேன். நிதி, சமூக பாதுகாப்பு, கல்வி, தொழில் முனைவு என பல துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நமது பெண்களின் சக்தியை முன்னணியில் எடுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும். கவுரவம் மற்றும் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.