கோப்புப் படம் 
இந்தியா

தந்தையிடம் அடிவாங்குவதில் இருந்து தப்பிக்க இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச சிறுமி பிஎஸ்எப் படையினரிடம் பிடிபட்டார்

செய்திப்பிரிவு

தந்தையிடம் அடிவாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியா வுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேச சிறுமி பிஎஸ்எப் படையினரிடம் பிடிபட்டார்.

வங்கதேசத்தில் உள்ள ஜெனாய்தா மாவட்டம் பன்ஸ்பெரியா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று இந்தியா-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் (பிஎஸ்எப்) பிடிபட்டார். அவரிடம் எந்தவிதமான உடமைகளோ, பணமோ, பொருளோ இல்லை. இந்தியா-வங்கதேச எல்லைக்கு மிக அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து கால்நடையாக 3 கிலோமீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளார். அவரை பிஎஸ்எப் படையினர் பிடித்து விசாரித்தபோது தந்தையிடமிருந்து அடிவாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக ஓடி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி இல்லாத பகுதி வழியாக இவர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். மேலும் தான் வங்கதேசத்துக்கு திரும்பிச் செல்ல விருப்பம் இல்லையென்றும், அப்படிச் சென்றால் தனது தந்தை அடிப்பார் என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை சைல்ட்லைன் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அரசு சாரா அமைப்பிடம் பிஎஸ்எப் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து பிஎஸ்எப் படையின் டிஐஜி எஸ்.எஸ். குலேரியா கூறும்போது, “அந்தச் சிறுமியை அவரது தந்தை தினந்தோறும் அடித்து வந்துள்ளார். அதற்கான காரணங்கள் போதுமானதாக இல்லை. தந்தையின் அடிக்கு பயந்து அவர் ஓடி வந்துள்ளார். சிறுமி ஓடி வந்து இந்திய எல்லையில் நுழைந்தது தொடர்பாக வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மற்றொரு சம்பவத்தில் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு தங்க பிஸ்கெட்டுகளைக் கடத்தி வந்த 11 வயது சிறுவனை பிஎஸ்எப் படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

தந்தையின் தூண்டுதலின் பேரில் அவர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்தியா-வங்க தேச எல்லை வழியாக தெற்கு பெங்கால் பகுதிக்கு தங்கத்தைக் கடத்த முயன்றபோது அவர் பிடிபட்டார்.

அவரிடமிருந்து ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.65 லட்சமாகும். இந்த சம்பவத்தில் சிறுவனின் தந்தை தப்பித்துவிட்டார் என பிஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்தனர். - பிடிஐ

SCROLL FOR NEXT