தற்கொலை செய்து கொண்ட தொலைக்காட்சி நடிகை பிரதியுஷாவின் காதலர் ராகுல் ராஜ் சிங்கின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜம்ஷத்பூரைச் சேர்ந்தவர் நடிகை பிரதியுஷா பானர்ஜி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். கடந்த வாரம் மும்பையில் உள்ள வீட்டில் இவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது காதலர் ராகுல் ராஜ் சிங் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நடிகை தற்கொலை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராகுலிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடி யாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், ஜாமீன் கேட்டு டின்தோஷி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி குவாஜா பரூக் அகமது விசாரித்தார். அப்போது, அரசு சார்பில் வாதாடிய பெண் வழக்கறிஞர் பல்குனி பிரம்பட், ‘‘முன்கூட்டியே திட்டமிட்டு பிரதியுஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம். எனவே ராகுலுக்கு ஜாமீன் வழங்க கூடாது’’ என்றார். அதை ஏற்ற நீதிபதி ராகுல் ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.