இந்தியா

பாக். சிறையில் இந்தியர் பலியான விவகாரம்: விவரங்களை திரட்ட துணை தூதருக்கு அறிவுறுத்தல்

பிடிஐ

பாகிஸ்தான் சிறையில் இந்தியாவை சேர்ந்த கிருபால் சிங் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அதிகாரிகளிடம் இந்திய துணை தூதர் ஆலோசனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருபால் சிங் மர்ம மரணத்தின் பின்னணி குறித்த தகவல்களை திரட்டுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த கிருபால் சிங் (50) என்பவர் கடந்த 1992-ல் வாகா எல்லையை கடந்து பாகிஸ்தானுக்கு சென்றதால் கைது செய்யப்பட்டார்.

அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கிருபால் சிங் நேற்று மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து சிறை கைதிகளிடம் லாகூர் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார். அப்போது திடீரென நெஞ்சுவலி யால் துடித்த கிருபால் சிங், உடனடி யாக உயிரிழந்தார் என கைதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து லாகூரின் கோட் லாக்பட் சிறை அதிகாரி நபீஸ் அஹமது கூறும்போது, "அவரது மரணம் இயற்கையானதாகவே தெரிகிறது. உடலில் சித்ரவதை செய்ததற்கான எந்தவொரு அடையாளங்களும் இல்லை" என்றார்.

SCROLL FOR NEXT