புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அதில் தமிழகம் தொடர்பாக நிறைய விஷயங்களை பேசினார்.
ராகுல்காந்தி தனது பேச்சில், "நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள். மக்களின் கருத்தை அரசர் கேட்காது போல உங்கள் அரசு செயல்படுகிறது. தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் தனித்துவம் கொண்டவை. அவற்றை மதித்து சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை கொடுக்கப்பட வேண்டும்.
மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருந்தால், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். இந்தியா என்றால் இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரு மாநிலத்துடன் பேசுவது, அதன் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒன்றியத்தின் பணிகள்.
கூட்டாட்சி என்பதே அதன் அர்த்தம். தமிழகத்தில் உள்ள என் சகோதரரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்பேன். அவர் தேவையை என்னிடம் சொல்வதுபோல எனக்கு தேவையானதை நானும் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று பலமுறை தமிழகத்தை குறிப்பிட்டார்.
உரையை முடித்து நாடாளுமன்ற வளாகத்தைவிட்டு வெளியேவரும் போது, தமிழகத்தை அதிகமுறை உச்சரித்தது ஏன் என அவரிடம் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு 'நான் ஒரு தமிழன்' என்று பதில் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவிவருகிறது. இதே வீடியோவில் உத்தர பிரதேசம் குறித்து உரையில் ஏன் பேசவில்லை என்பதுபோல் அந்த நபர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் கொடுப்பதை தவிர்த்து வேகமாக நடந்துச் சென்றுவிட்டார்.