இந்தியா

குறையும் கரோனா தொற்று!- இந்தியாவின் அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 9.26% ஆக சரிவு

ஏஎன்ஐ

புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 10%க்கும் கீழ் குறைந்து 9.26 சதவீதம் என்றளவில் உள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் அதாவது நூறு பேரில் எத்தனைப் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்ற விகிதம் 10%க்கும் கீழ் குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக மருத்துவ, சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்,

இந்தியாவில் ஒமைக்ரானால் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போது மெல்ல மங்குகிறதா என்ற பேச்சுக்களும் எழத் தொடங்கியுள்ளன.

கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,61,386.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,16,30,885.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,81,109.

இதுவரை குணமடைந்தோர்: 3,95,11,307.

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 16,21,603.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 9.26% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,733.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,97,975.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை: 167.29 கோடி.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 14.15% ஆக உள்ளது. அன்றாட பலி எண்ணிக்கை 1733 என்று அச்சுறுத்தும் வகையில் உள்ள நிலையில், கேரளா தனது பழைய கரோனா பலி கணக்கை நேற்று புதிதாக சேர்த்துக் கொடுத்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

நாட்டில் கடந்த 3ஆம் தேதி முதல் 15 வயதிலிருந்து 18 வயதுடையோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 4,71,44,423 பேருக்கு தவணை தடுப்பூசியும் 10,81,838 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அன்றாட பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 14,372 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்டா, ஒமைக்ரான் என எந்த வகை உருமாறிய வைரஸாக இருந்தாலும் சரி இதுவரை உலகளவில் கரோனா கொடிய நோயாகவே உள்ளது ஆகையால் மக்கள் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT