லக்னோ: உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்தனர். 29 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பஹர்பூர் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை விழா ஒன்று நடந்தது. இதில்கிராம மக்கள் சுமார் 40 பேர் மது அருந்தினர். இவர்களில் வயதான பெண்மணி ஒருவர் உட்பட 9 பேர் நேற்று அதிகாலை உயிரிழந்தனர். 29 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ரேபரேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வைபவ் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘‘கள்ளச் சாராயம் அருந்தி கிராம மக்கள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற மதுபானக்கடை ஒன்றின் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்’’ என்றார்.
ரேபரேலி போலீஸ் சூப்பிரண்டெண்ட் ஷ்லோக் குமார் கூறுகையில், ‘‘கொலைக் குற்றச்சாட்டு, உணவில் கலப்படம் போன்ற பிரிவுகளின் கீழ் மதுபானக் கடை உரிமையாளர், விற்பனையாளருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்’’ என்றார்.- பிடிஐ