புதுடெல்லி: குஜராத் மாநிலத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினம் கடற்கரையில் புகழ்பெற்ற சோமநாதர் ஆலயம் உள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்க திருத்தலங்களில் இக்கோயில் முதன்மையானது ஆகும். இந்தக் கோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு அருகில்ரூ.30 கோடி செலவில் புதிய பயணிகள் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதில் அறைகள், விஐபி மற்றும்டீலக்ஸ் அறைகள், கருத்தரங்கு அறை, கூட்ட அரங்கம் உள்ளிட்டபல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடலை கண்டு ரசிக்கும் வகையில் ஒவ்வொரு அறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசு வசதிகள் கோயிலுக்கு தொலைவில் இருப்பதால் புதிய பயணிகள் இல்லத்தின் தேவை உணரப்பட்டது.
இந்நிலையில் புதிய பயணிகள் இல்லத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து உரையாற்ற உள்ளார். இத்தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.