புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3.17 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
''இந்தியாவில் 249 நாட்களில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 9,287 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 19 லட்சத்து 24 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை கடந்த 234 நாட்களில் இது மிக அதிகபட்சமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 491 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 87 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 159.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பாதிப்பில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5.03 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 93.69 சதவீதமாகவும் குறைந்துள்ளது'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.