பனாஜி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் அமித் பலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா
சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப். 14-ம் தேதி நடைபெறுகிறது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி இந்த தேர்தலில் தனது பலத்தை நிருபிக்க தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் அமித் பலேகரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார். அவர் கூறியதாவது:
கோவா சட்டப்பேரவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெறும். பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை ஆம் ஆத்மி பூர்த்தி செய்யும். ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் வழக்கறிஞர் அமித் பலேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.