இந்தியா

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலில் வைரஸ் 9 நாட்கள் உயிருடன் இருக்கும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனாவால் பாதித்து இறந்தவர்களின் உடலில் வைரஸ் 9 நாட்கள் உயிருடன் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பார்சி இனத்தவர்களின் பஞ்சாயத்து அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "பார்சி இனத்தவர்கள் இறந்தால் அவர்களை புதைப்பதோ அல்லது எரிப்பதோ இல்லை. டவர் ஆப் சைலன்ஸ் என்னும் கட்டிடத்தில் இறந்த உடல்கள் பிணம் தின்னும் பறவைகள், விலங்குகளால் சிதைக்கப்படும். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை புதைக்க அல்லது எரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இது பார்சி மக்களின் மரபுக்கு எதிரானது" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றநீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ரஜத் நாயர் சமர்ப்பித்த பதில் மனுவில், "கரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் கரோனா வைரஸானது 9 நாட்கள் உயிருடன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே இறந்தவர் களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள் கூறும்போது, “இறந்தவர்களின் உடலில் இருந்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்தல், பார்சி மக்களின் இறுதிச் சடங்குகளை கடைப்பிடித்தல் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் வகையில் ஒரு வழியை கண்டறிந்து அதைமத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT