இந்தியா

சமாஜ்வாதிக்கு மட்டும்தான் கட்டுப்பாடா, பாஜகவுக்கு இல்லையா? - தேர்தல் ஆணையத்துக்கு அகிலேஷ் கேள்வி

செய்திப்பிரிவு

லக்னோ: கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக சமாஜ்வாடி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பாஜக எம்எல்ஏ ரோட்ஷோ நடத்தும் வீடியோவை பகிர்ந்து, அகிலேஷ் யாதவ் தேர்தல் ஆணையத்துக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உ.பி. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகியுள்ளது. கரோனா தொற்று காரணமாக நேரடி தேர்தல் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனினும் வேட்பாளர்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் எழுந்து வருகிறது.

கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக கடந்த வாரம் சமாஜ்வாடி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், இன்று பாஜக எம்எல்ஏ ஒரு ரோட்ஷோ நடத்தும் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.

விதிகளை மீறி ஆளும் கட்சி செயல்பட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிட் நெறிமுறைகளை மீறும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சமமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘சமாஜ்வாடி கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில நாட்களே பதவியில் இருகக்கும் வாய்புள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர் வரும் தேர்தலில் தோல்வியடைவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவர் அம்ரோஹாவில் நிறுத்தியுள்ள பாஜக வேட்பாளரின் இந்த செயல்பாடு கரோனா வழிகாட்டும் நெறிமுறைகளைகேலி செய்வதாக உள்ளது. தேர்தல் ஆணைம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT