இந்தியா

தலித் இளைஞரை காதலித்த மகளை கொன்ற பெற்றோர் கைது: கர்நாடகாவில் தொடரும் சாதி ஆணவக் கொலை

இரா.வினோத்

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள சந்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் குரு மல்லப்பா. லிங்காயத்து வகுப்பை சேர்ந்த இவரது மகள் மதுகுமாரி (22), அதே பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் ஜெயராமை காதலித்துள்ளார். கடந்த மாதம் மதுகுமாரியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜெயராமை, குருமல்லப்பா சரமாரியாக தாக்கி யுள்ளார்.

உடனடியாக ம‌துகுமாரிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்தனர். இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மது குமாரியின் உடலை குடும்பத்தார் எரித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜெயராம் கடந்த வியாழக்கிழமை மைசூரு மாவட்ட காவல் ஆணையர் அபினவ் கெரே-விடம் புகார் அளித் தார். அதன்பேரில் நஞ்சன்கூடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

மாம்பழ சாறில் விஷம்

மைசூரு மாவட்ட காவல் ஆணையர் அபினவ் கெரே ‘தி இந்து'விடம் கூறியதாவது:

மதுகுமாரியின் தந்தை குரு மல்லப்பா, தாய் மஞ்சுளா, அண்ணன் குரு பிரசாத் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தினோம். அப்போது மரணம் குறித்து முன் னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். மதுகுமாரியின் பழைய மருத்துவமனை குறிப்புகளை ஆராய்ந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான கார‌ணங்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

இதைக்கூறி குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, மதுகுமாரியை கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டனர். குடும்ப கவுர வத்தை மீறி தலித் இளைஞரை காதலித்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உறவினர் களுக்கு தெரிந்தால் எங்கள் குடும்பத்துக்கு அவமானமாகி விடும். எனவே சம்பவத்தன்று இரவு மதுகுமாரிக்கு மாம்பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தோம். உடலை மறுநாள் அதிகாலையிலே எங்களது தோட்டத்தில் எரித்தோம் எனத் தெரிவித்தார்.

மதுகுமாரியின் மரணம் சாதி ஆணவ கொலை என தெரிய வந்ததை இந்திய தண்டனை சட்டம் 201-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இவ்வழக்கில் அவரின் தந்தை குருமல்லா (64), தாய் மஞ்சுளா (50), அண்ணன் குரு பிரசாத் (26) ஆகிய மூவரையும் கைது செய்துள்ளோம்''என்றார்.

இதுகுறித்து கர்நாடக ஜனசக்தி அமைப்பை சேர்ந்த வாசு கூறும் போது, “கர்நாடகாவில் கடந்த ஓராண்டில் 10 பேர் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டிருப்ப தாக கர்நாடக குற்றவியல் கண் காணிப்பகம் கூறுகிறது. இதனை தடுக்க தனிச்சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT