இந்தியா

உலகம் 4வது கரோனா அலையை எதிர்கொண்டுள்ளது; நாம் எச்சரிக்கையுடன் இருப்போம்: மத்திய அரசு

செய்திப்பிரிவு

உலகம் 4வது கரோனா அலையில் உள்ளது. நாம் எச்சரிக்கையுடன் இருப்போம் என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் சூழலில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

1. உலகம் 4வது கரோனா அலையை எதிர்கொண்டுள்ளது. டிசம்பர் 23 ஆம் தேதி மட்டும் 9 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

2. ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் கரோனா குறைவாக இருக்கிறது. இருந்தாலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

3. இந்தியாவில் அன்றாடம் 7000 பேருக்கு தொற்று உறுதியாகிறது. கடந்த 4 வாரங்களாக அன்றாட தொற்று 10,000க்கும் கீழ் உள்ளது.

4. இந்தியாவில் முதல் அலை செப்டம்பர் 2020லும், இரண்டாவது அலை மே 2021லும் ஏற்பட்டது.

5. தற்போது இந்தியாவில் தொற்று குறைந்துள்ளது. உலகளவிலான பாசிடிவிட்டி 6%க்கு மேல் உள்ளது. இந்தியாவில் சராசரியாக 5.3% உள்ளது. இருப்பினும் பிராந்தியங்களில் வேறுபாடு இருக்கின்றது.

6. கேரளா, மிசோரம் பாசிடிவிட்டி ரேட் மட்டும் கவலையளிப்பதாக இருக்கிறது. (பாசிடிவிட்டி என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதில் கணக்கீடு)

7. 20 மாவட்டங்களில் வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 5 முதல் 10% ஆக இருக்கிறது.

8. 108 நாடுகளில் மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேல் ஒமைக்ரான் தொற்றாளர்கள் உள்ளனர். இதுவரை ஒமைக்ரானால் 26 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 17 மாநிலங்களில் 358 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 114 பேர் குணமடைந்துள்ளனர்.

9. இந்தியாவில் தொற்று உறுதியானவர்களில் 121 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 44 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். 18 பேருக்கு தோற்று ஏற்பட்ட காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை. ஒமைக்ரான் பாதித்தவர்களில் 183 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள். 7 பேர் தடுப்பூசி போடாதோர், 2 பேர் ஒரு டோஸ் மட்டும் செலுத்தியவர்கள்.

10. இந்தியாவில் இப்போதுவரை டெல்டா தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT