இந்தியா

‘‘தேர்தல் சமயத்தில் தேச விரோதிகள் சதி’’-  பஞ்சாப் முதல்வர் ஆவேசம்

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சில தேச விரோதிகள் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் எட்டு நீதிமன்ற அறைகள் உள்ளன. அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்தை காலி செய்து வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ஆர்எஸ் மாண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பா அல்லது நாசவேலையா என பஞ்சாப் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறும்போது, "லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு நான் லூதியானா செல்கிறேன். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சில தேச விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். அரசு விழிப்புடன் உள்ளது. குற்றவாளிகள் தப்பிச் செல்ல முடியாது" என்றார்.

SCROLL FOR NEXT