இந்தியா

தொல்லியல் துறை மத்திய ஆலோசனை வாரிய குழு 7 வருடங்களாக அமைக்கப்படவில்லை: மக்களவையில் கிஷண் ரெட்டி தகவல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (ஏஎஸ்) செயல்பாடுகளுக்காக இந்தியத் தொல்லியல் துறை மத்திய ஆலோசனை வாரியம் (சிஏபிஏ) உள்ளது. இது காலாவதியானதால் அதன் புதிய குழு கடந்த ஏழு வருடங்களாக அமைக்கப்படவில்ல என்ற தகவல் மக்களவையில் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி.யான டி.எம்.கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது பதிலில் மத்திய அமைச்சரான கிஷண் ரெட்டி கூறும்போது, ‘‘தொல்லியல் துறைக்கான சிஏபிஏவின் கடைசிக் கூட்டம் கடந்த அக்டோபர் 17, 2014 அன்று நடைபெற்றது, இதில் 13 மாநில அரசு நியமன உறுப்பினர்கள் உட்பட 53 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிஏபிஏவின் உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், அதன் ஐந்து உறுப்பினர்களான நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது, இடைக்கால நடவடிக்கையாக இந்திய தொல்பொருள் ஆய்வகத்திற்கு உதவுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் 28 ஆகும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வேலூர் மக்களவை தொகுதியின் எம்.பி.யான கதிர் ஆனந்த் தனது கேள்வியில், ‘ஏஎஸ்ஐயின் சிஏபிஏ பல ஆண்டுகளாகக் கூடவில்லையா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் வாரியம் நடத்திய கடைசி கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் விவரம் யாவை?’’ எனக் கேட்டிருந்தார்.

அமைச்சர் கிஷ்ண் ரெட்டி கூறிய 28 காலி பணியிடங்களில் பல முக்கிய அதிகாரிகளின் பதவிகளும் இடம் பெற்றுள்ளன.கூடுதல் ஏடிஜி, மூன்று இணை ஏடிஜி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT