இந்தியா

16 கோடி பேருக்கு மது பழக்கம்; மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்: யுபிஎஸ் நிறுவன ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் மது அருந்து பவர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மதுபானங்கள் விற்பனை, எத்தனை பேர் மது அருந்துகிறார்கள் என்பது தொடர்பாக நாடு முழுவதும் யுபிஎஸ் என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா முழுவதும் சுமார் 16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 7.5 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். குறிப்பாக, கரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில்தான் மதுஅருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய மதுபானச் சந்தையை பொறுத்தவரை, யூனியன் ஸ்பிரிட்ஸ் என்ற பிராண்டின் கீழ் வரும் மதுபானங்கள் தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. அதிக அளவு விற்பனையாகும் பீர் ரகங்களில் யுனைட்டெட் ப்ரூவெரிஸ் நிறுவனத்தின் பீர்கள் முதலிடத்தில் உள்ளன. கிங்ஃபிஷர் பீர் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா, தெலங்கானா முதலிடம்

நாட்டிலேயே மதுபானப் பிரியர்கள் அதிகம் உள்ள மாநிலங்களாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இருக்கின்றன.

கள் மற்றும் நாட்டு சாராய விற்பனையிலும் ஆந்திராவும், தெலங்கானாவும் முதலிடத்தில் உள்ளன. அதே சமயத்தில், காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கள் மற்றும் நாட்டு சாராயங்களின் விற்பனை மிகக் குறைவாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT