இந்தியா

தீவிர அரசியலில் இருந்து மெட்ரோ மேன் ஸ்ரீதரன் விலகல்: இனியும் ஆர்வமில்லை எனப் பேட்டி

செய்திப்பிரிவு

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக இந்தியா மெட்ரோ மேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஷபி பரம்பிலிடம் தோல்வியுற்றார்.

இந்நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், நான் தீவிர அரசியலில் இனி ஈடுபடப்போவதில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது. நான் அரசியலைக் கைவிடக் காரணம் எனக்கு அதில் விருப்பமில்லை என்பது மட்டுமே. எனக்கு 90 வயதாகிவிட்டது. நான் எப்போதுமே அரசியல்வாதியாக இருந்ததில்லை. ஒரு ஆட்சிப்பணியாளராகவே அரசியலில் இணைந்தேன்.

மேலும், மக்கள் சேவைக்காக அரசியலைக் கடந்து மூன்று தொண்டு நிறுவனங்களை நான் நடத்துகிறேன். முதன்முறையாக நான் தோற்றபோது வருத்தமாக இருந்தது. ஆனால், வெற்றிப் பெற்றிருந்தாலும் பயன் இருந்திருக்கப் போவதில்லை. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல், ஒரு கட்சியின் ஒற்றை எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன செய்துவிட முடியும் என்றார்.

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜகவில் இணையும் நிகழ்வு அமித் ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக நடந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT