ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்துடன் உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்த பாதுகாப்பு பிரிவு வீரர் சாய் தேஜாவின் (27) உடலுக்கு மக்கள் நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கில், துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப் பட்டது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், குரபலகோட்டா அருகே உள்ள எகுவரேகுல பள்ளி கிராமத்தை சேர்ந்த சாய்தேஜாவும் (27) உயிரிழந்தார். இவருக்கு சியாமளா என்ற மனைவியும், மோக்ஷக்னா (5) என்கிற மகனும், தர்ஷினி (2) என்கிற மகளும் உள்ளனர். கடந்த விநாயகர் சதுர்த்திக்கு கடைசியாக வீட்டிற்கு வந்து சென்ற சாய் தேஜா, பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு வருவதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சாய் தேஜா உயிரிழந்தார். இவரது உடல் அடையாளம் காண, இவரின் பெற்றோர், பிள்ளைகளிடம் ரத்த மாதிரி சேகரித்து மரபணு சோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் நேற்று முன் தினம் சனிக்கிழமை மாலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், நேற்று காலை ராணுவ வாகனத்தில் அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது, கர்நாடகா-ஆந்திரா எல்லையிலிருந்து அவரது சொந்த ஊரான எகுவரேகுல பள்ளி வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு திரளான மக்கள் கலந்து கொண்டு பைக்குகள் மூலம் ஊர்வலமாக வந்தனர். வழி நெடுகிலும் மக்கள் அவரது உடலுக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர். பின்னர், சாய்தேஜாவின் உடல் அவரது வீட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர்களது நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை மற்றும் போலீஸ் மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஊரே திரண்டுவந்து இறுதி அஞ்சலி செலுத்தியது.