தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜோவத் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், இன்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தின் புரியில் கரையை கடக்கவுள்ளது.
இதனிடையே, இந்தப் புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இருந்தபோதிலும், அது கரையை கடக்கும் சமயத்தில் பலத்த காற்றும், கனமழையும் பெய்யக் கூடும் என்பதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிசா அரசு எடுத்து வருகிறது. புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களை, பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து தங்க வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், புரியில் கேந்தப்ரா, பராதீப் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 276 கர்ப்பிணிகள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு நேற்றைய தினமே குழந்தை பிறந்தது. புயல் கரையை கடக்கும் சமயத்தில், திடீரென பிரசவ வலி வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது கடினம் என்பதால் இந்த நடவடிக்கையை ஒடிசா அரசு எடுத்துள்ளது. -பிடிஐ