மத்திய அரசின் ஒப்புதல் பெறாத 300க்கும் மேற்பட்ட கூட்டு கலவை மருந்துகள் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மருந்து நிறுவனமான அப்பாட் பல்வேறு வகையான நோய்களுக்கு கூட்டு கலவை முறையில் Phensedyl என்ற இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இதில் codeine என்ற மருந்து கலக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இருமல், சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, உடல் வலி என பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணியாக செயல்படுகிறது. இதனால் இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரே மருந்தில் பல்வேறு வகையான நோய்களுக்காக அளிக்கப்படும் Phensedyl, Corex போன்ற 300-க்கும் மேற்பட்ட கூட்டு கலவை மருந்து விற்பனைக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மாநில அரசுகளின் அனுமதியுடன் இந்திய சந்தைக்குள் நுழைந்த 6,000 கூட்டு கலவை மருந்துகளை மறு ஆய்வு செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில மருந்துகள் தடை செய்யக்கூடியவை என தெரியவந்துள்ளது. எனினும் அந்த மருந்துகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் அதற்கான உத்தரவு வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.