மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஒருபோதும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியதில்லை என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
பிரதமர் மோடி வானொலி மூலம் மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி முதன்முதலில் 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றிக்கிழமை நடக்கும் இந்த நிகழ்ச்சி, 83-வது வாரத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் பாஜக தொண்டர்கள் மத்தியில் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று பேசுகையில் “ பிரதமர் மோடி அரசியல் குறித்து ஒருபோதும் வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத்தில் பேசியதில்லை. அந்த நிகழ்ச்சியின் மூலம் அரசியல் ஆதாயமும் தேடியதில்லை. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தேசத்தின் கலாச்சாரத்தை பற்றி மட்டுமே பேசுவார்.
தேசத்தின் விழாக்கள், சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம், மருத்துவம், விளையாட்டு, இளைஞர்கள் நலன், குழந்தைகள் நலன், சாதனையாளர்கள் ஆகியோர் மட்டுமே பிரதமர் மோடி பேசுவார்.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் மன் கி பாத் நிகழ்ச்சியை பாஜகவினர் கேட்க வேண்டும், அது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது. இதற்காக 10.40லட்சம் பூத்களில் பாஜகவினர் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.