கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது மோதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதினை அவரது மனைவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர்.
உயிரிழந்த 20 பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர். வீரர் பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவ விருதுகள் அறிவிக்கப்பட்டன.கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகா வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கான வீர் சக்ரா விருத அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த விருதுகளை வழங்கினார்.
கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகா வீர் சக்ரா விருதினை அவரது தாய் மற்றும் மனைவியிடம் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
அதேபோல், தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கான வீர் சக்ரா விருதினை அவரது மனைவியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தொடர்ந்து மற்ற வீரர்களுக்கான விருதுகள் அவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.