கோப்புப்படம் 
இந்தியா

சபரிமலையில் கனமழை; பக்தர்கள் வர வேண்டாம்: ஐயப்பன் கோயிலுக்கு வருவதற்கு இன்று மட்டும் தடை

செய்திப்பிரிவு

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடும் மழைப்பொழிவு இருப்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு இன்று ஒருநாள் மட்டும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, பல இடங்களில் மண்சரிவு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது, மண்டலபூஜை, மகரவிளக்கு சீசனும் தொடங்கிவிட்டதால், ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிைலயில் கனமழை பெய்துவருவதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அணைகளில் நீர்மட்டமும் தொடர்்ந்து உயர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் வருகைக்கு பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம்தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் ஐயர் வெளியிட்ட அறிவிப்பில், “ பத்தினம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளில் நீர் மட்டம் தொடரந்து உயர்ந்து வருகிறது. பம்பை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காக்கி-ஆனத்தோடு அணைகளில் இருந்து மதகுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழிலில் பக்தர்கள் ஐயப்பயன் கோயிலுக்கு வருவது பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கும் என்பதால், இன்று ஒருநாள்(20ம்தேதி) மட்டும் பம்பை மற்றும் சபரிமலைக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.

இன்றைய தேதியில் தரிசனத்துக்கு முன்பதிவுசெய்த பக்தர்கள், சன்னிதானத்தில் ஐயப்பயனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நேரத்தில் பக்தர்கள் சபரிமலைக்கு பயணிக்க வேண்டாம், ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT