படம் உதவி ட்விட்டர் 
இந்தியா

ஆன்லைனில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் வழக்கு; 7 பேரைக் கைது செய்தது சிபிஐ: 3 ஆண்டுகளில் 24 லட்சம் பாலியல் சீண்டல்கள்

செய்திப்பிரிவு

ஆன்-லைனில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு, துன்புறுத்தல் தொடர்பான 23 வழக்குகளில் 7 பேரை சிபிஐ அதிகாரிகள்கைது செய்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்களை பதிவேற்றம் செய்ததல், அதை பரப்புதல் போன்ற குற்றங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிபிஐ அதிகாரிகள்கடந்த இரு நாட்களுக்கு முன் நடத்திய சோதனையின்முடிவில் இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இனிவரும் நாட்களில் அதிகமானோர் கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

டெல்லியைச் சேர்ந்த ராமன் கவுதம், சத்யேந்தர் மிட்டல், புருஷோத்தம் ஜா, ஒடிசாவைச் சேர்ந்த சுரேந்திர குமார் நாயக், நொய்டாவைச் சேர்ந்த நிஷாந்த் ஜெயின், ஜிதேந்திர குமார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜான்ஸ், ஆந்திராவின் திருப்பதியைச் சேர்ந்த டி மோகன் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதில் மோகன் கிருஷ்ணா குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்து, பலருக்கு இணையத்தில் பரப்பியுள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்து அதிகாரிகள் கூறுகையில் “ கைது செய்யப்பட்டவர்கள் குழந்தைகள் ஆபாசக் காட்சிகள், படங்களை குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிட்டு அதை பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.

இதை விற்பனையும் செய்துள்ளனர். குழந்தைகள் பாலியல்துன்புறுத்தல், ஆபாசக் காட்சிகள் தொடர்பாக 23 வழக்குகள் 83 பேருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சமூக வலைத்தளங்களில் லிங்க், வீடியோக்கள், படங்கள், கருத்துக்கள், போன்றவற்றை பகிர்ந்துள்ளனர்.

குழந்தைகள் ஆபாசாக் காட்சிகளைப் பார்க்கவே சிலர் பணம் செலுத்தி வீடியோக்களை வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிபிஐ நடத்திய விசாரணையில் 50 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன, இதில் 5 ஆயிரம் பேர் சிக்கியுள்ளார்கள் எனத் தெரியவருகிறது.

100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து இதில் தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவருகிறது. இதுதொடர்பாக அந்தந்த நாட்டு விசாரணை அதிகாரிகள், போலீஸாருடன் இணைந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் 36 பேர், கனடாவில் 35 பேர், அமெரிக்கா 35, வங்கதேசம் 31, இலங்கை 30, நைஜிரியா 28, அசர்பைஜன் 27, ஏமன் 24, மலேசியா 22 பேர் சிக்கியுள்ளனர்.

கடந்த 2017 முதல் 2020்ம் ஆண்டுவரை இந்தியாவிலிருந்து 24 லட்சம் குழந்தைகள் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளது தெரியவருகிறது என இன்டர்போல் தெரிவிக்கிறது.

இதில் 80 சதவீத குழந்தைகள் 14 வயதுக்குக் குறைவானவர்கள். குழந்தைகள் ஆபாசக் காட்சிகள், வலைத்தளம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தேடுதல்தளத்தில் 1.16லட்சம் பேர் இது குறித்து தேடுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

          
SCROLL FOR NEXT