சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக் கொள்ளட்டும் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கிண்டல் செய்துள்ளார்.
உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல் செய்வதற்காக ஜின்னாவைப் பற்றிப் பேசுகிறது சமாஜ்வாதி கட்சி. அதனால்தான் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக் கொள்ளட்டும். அவரின் கட்சியின் பெயரையும் ஜின்னாவாடிக் கட்சி எனவும் மாற்றிக் கொள்ளட்டும்.
ஜின்னா ஒருபோதும் தேர்தலில் வெல்லமாட்டார். இந்த மாநிலத்தின் மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுப்பார்கள். முகமது அலி ஜின்னாவோ அல்லது முக்தர் அன்சாரியோ தேர்தலில் வெல்ல உதவமாட்டார்கள். மக்கள் தாமரைச் சின்னத்தைத்தான் மீண்டும் தேர்வு செய்வார்கள்.
இந்த மாநிலத்தின் மக்களை நேர்மையுடன் அணுகும் கட்சி பாஜக மட்டும்தான். மாஃபியாக்கள், கூலிப்படைகள் ஏராளமாக இருந்த நிலையில் அவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியைக் கொண்டுவந்தது பாஜக அரசுதான்.
கடந்த 3 தேர்தலில் தோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன. இந்த முறையும் தோற்றுவிடுவோம் என அச்சப்படுகிறார்கள். ஆனால், எங்களுக்குக் கள நிலவரம் என்னவென்று தெரியும். கிளை மட்டத்திலிருந்து பாஜக வலுவாக இருக்கிறது. இது சமாஜ்வாதி கட்சிக்கும் தெரியும். அவர்களிடம்தான் கூலிப்படைகளும், குண்டர்களும், மாஃபியாக்களும் இருக்கிறார்கள்''.
இவ்வாறு கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.