இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கும்: அமைச்சரவை குழு பரிந்துரை

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடத்த அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

கரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. அடுத்தடுத்த அனைத்து அமர்வுகள் - பட்ஜெட் மற்றும் பருவமழை - கோவிட் காரணமாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது.

இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக அமைச்சரவை குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற ஒரு மாத குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்திலிருந்து அனைத்து கோவிட் -19 நெறிமுறைகளையும் பின்பற்றி தொடங்கும் என தெரிகிறது.

நவம்பர் 29 -ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையும். சுமார் 20 அமர்வுகளைக் கொண்ட கூட்டத்தொடர் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக முடிவடையும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் அமர்வுகள் இருந்தாலும் உறுப்பினர்கள் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி அமருவார்கள்.

குளிர்கால கூட்டத்தொடரில், வளாகம் மற்றும் முக்கிய நாடளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைபவர்கள் எப்போதும் முககவசம் அணிய வேண்டும் மற்றும் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

2024 பொதுத் தேர்தலுக்கான அரையிறுதியாகக் கருதப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதேசமயம் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

SCROLL FOR NEXT