மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் | கோப்புப்படம் 
இந்தியா

சட்டவிரோதப் பணப்பரிமாற்றம்: அனில் தேஷ்முக்கிடம் விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை வரும் 12ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

அதேசமயம், சிறப்பு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அனில் தேஷ்முக்கை வைக்க வேண்டும் என்று முன்பு பிற்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மகாராஷ்டிராவில் ஆளும் மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசில் வருகின்றனர். உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். என்சிபி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான தேஷ்முக் மீது மும்பை போலீஸ் ஆணையர் பரம் பிர் சிங் குற்றம்சாட்டி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து மும்பை போலீஸ் ஆணையர் பதிவியிலிருந்து பரம்பிர் சிங் நீக்கப்பட்டார். அதன்பின் பரம் பிர் சிங் அளித்த பேட்டியில் “ தன்னை மாதந்தோறும் மும்பையில் உள்ள மதுபார்கள், ஹோட்டல்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்துதரக் கோரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்துகிறார்” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தார். அனில் ேதஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சிபிஐ தேஷ்முக், அவரின் மனைவி, மகன் ரிஷிகேஷ் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ வழக்குப்பதிவு செய்ததை ஆதாரமாக வைத்து அமலாக்ப்பிரிவு மும்பை, நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் ரெய்டு நடத்தியது.

இந்த ரெய்டைத் தொடர்ந்து அனில் தேஷ்முக்கிற்கு சொந்தமாக ரூ.4.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்தது. மேலும் அனில் தேஷ்முக் பதவியில் இருந்தபோது, ரூ.4.18 கோடி பணத்தை போலியான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அனில் தேஷ்முக் உதவியாளர்கள் இருவரையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அனில் தேஷ்முக்கிடம் கடந்த 2-ம் தேதி 12 மணிநேரம் விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டபின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனில் தேஷ்முக்கிடம் விசாரிக்க கடந்த 6ம் தேதிவரை அமலாக்கப்பிரிவுக்கு அனுமதியளித்து சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில் அனில் தேஷ்முக்கை விசாரிக்கும் அனுமதியை நீட்டிக்கக் கோரி அமலாக்கப்பிரிவினர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று கோரினர்.ஆனால், அதற்கு அனுமதி மறுத்து, வரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவி்ட்டார்.

சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் ேமல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த விடுமுறைக் காலஅமர்வு வரும் 12ம் தேதிவரை அனில் தேஷ்முக்கை அமலாக்கப்பிரிவினர் விசாரிக்க அனுமதியளித்தனர். அதேநேரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டனர்

SCROLL FOR NEXT