கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அம்மாநிலத்தில் ராகுல் காந்தி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெல்ஸோ கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அப்படி இருந்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரதமருக்கு நெருக்கமான 4 முதல் 5 தொழிலதிபர்களே லாபம் அடைகிறார்கள் என்பது தெரியவரும்.
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை மக்கள் தோற்கடிக்க போவது உறுதி. கோவா மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை காங்கிரஸ் ஏற்படுத்தும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.