அருணாச்சலப் பிரதேசத்தில் சீனவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் தவாங் செக்டாரில் குவிந்துள்ள இந்திய ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவப் பயிற்சி, தியானம், கடுமையான உடற்பயிற்சி என வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், எல்லைப் பகுதியில் எதிரிகளை வீழ்த்தும் திறனை நிரூபிக்கும் வகையில் ராணுவ டாங்குகளைக் கொண்டு ட்ரில் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா அத்துமீறி ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்களை அமைத்து வருகிறது. இதற்கு நீண்ட காலமாகவே இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் எல்லையில் திடீரென இந்தியா போர் விமானங்கள், பீரங்கிகள், டாங்குகள், படை வீரர்களைக் குவித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக ராணுவத் தளபதி பிபின் ராவத், இந்தியா எல்லையில் எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று, அருணாச்சல பிரதேசத்தின் ருபா பகுதியில், கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "இரு தரப்பினரும் அசல் கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஏசி) நெருக்கமாக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அது சில சமயங்களில் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. அசல் கட்டுப்பாட்டு கோடு மற்றும்ஆழமான பகுதிகளில் நாங்கள்கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளோம்.
எந்த தற்செயல் நிகழ்வையும் சமாளிக்க ஒவ்வொரு பகுதியிலும் போதுமான சக்தி நம்மிடம் உள்ளது. எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் திறன் நம்மிடம் இருக்கிறது. ரோந்து செல்லும் முறையில் அதிக மாற்றம் செய்யவில்லை. சில பகுதிகளில் ஓரளவுக்கு ரோந்துப் பணியை அதிகரித்துள்ளோம்.
கிழக்கு லடாக் பகுதியைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இது கவலைஅளிக்கிறது. நமது ராணுவத்திடம் சிறந்த கண்காணிப்பு ரேடார்கள்,சிறந்த தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. அதை நோக்கி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது எல்ஏசி பகுதியில் இரவு நேரத்திலும் கண்காணிப்புப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆளில்லா கண்காணிப்பு விமானம் பயன்படுத்தப்படும்" என்று கூறினார்.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தி வீரர்கள் தீவிர போர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.