தேசத்தின் மக்கள்தொகை கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும். தேசத்தில் மக்கள் தொகையில் சமநிலையற்ற சூழல் நிலவுகிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகத் தெரிவித்தார்.
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்தில் அந்த அமைப்பின் 96-வது ஆண்டு விழா மற்றும் விஜயதசமி பண்டிகைக் கொண்டாட்டம் இன்று நடந்தது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பைப் பார்வையிட்ட தலைவர் மோகன் பாகவத், கொடி ஏற்றி, சாஸ்திர பூஜைகள் செய்தார்.
அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
''நாட்டின் மேம்பாட்டை நாம் மறுபரிசீலனை செய்யும்போது, பல கவலைகள் நம்கண்முன் வந்து செல்கின்றன. இதில் குறிப்பாக வேகமாக அதிகரித்துவரும் மக்கள்தொகை எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆதலால் அந்தச் சவால்களை முழுமையாக நாம் எதிர்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாகக் கடந்த 2015-ம் ஆண்டிலேயே அனைத்து இந்திய ஆர்எஸ்எஸ் நிர்வாகக் குழுக் கூட்டம் ராஞ்சியில் நடந்தபோது, தீர்மானம் நிறைவேற்றினோம். தற்போதைய சூழ்நிலையில், பூர்வீக இந்துக்கள் மீதான துன்புறுத்தல், அதிகரிக்கும் குற்றமயமாக்கல் மற்றும் தங்கள் பகுதிகளில் சமநிலையற்ற மக்கள்தொகை வளர்ச்சி போன்றவற்றால் தாங்கள் வாழும் பகுதியிலிருந்து இந்துக்கள் தப்பிக்க அழுத்தம் அதிகரிக்கிறது.
மேற்கு வங்கத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும் அங்குள்ள இந்து மக்களின் பரிதாப நிலை, மக்கள் தொகையில் சமநிலையின்மை, அரசு ஆகியவை காட்டுமிராண்டித்தனமான கூறுகளைத் திருப்திப்படுத்தும்போக்கும் கூட காரணமாக இருக்கலாம். எனவே, அனைத்துக் குழுக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கை அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனைக் கருத்தில் கொள்ளும் பழக்கத்தை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
போதைப் பொருள் கட்டுப்பாடு
நாட்டில் பல்வேறு வகையான போதைப் பொருள் நுகரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. எவ்வாறு இதைக் கட்டுப்படுத்துவது என்பது நமக்குத் தெரியாது. இந்த போதைப் பொருள் வர்த்தகத்திலிருந்து யாரெல்லாம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியாது.
இந்தப் பணம் தேசவிரோதச் செயல்களுக்குப் பயன்படுகிறது. தேசத்தின் எல்லைக்கு அப்பால் இருப்போர் மூலம் இவை ஊக்கப்படுத்தப்படுகின்றன.
இந்த போதைப் பொருள் நடமாட்டத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த போதைப் பொருள் பழக்கத்திலிருந்து ஒருவர் மீள வேண்டுமென்றால் சுய கட்டுப்பாடுதான் சிறந்த கட்டுப்பாடாக இருக்கும். இதற்கு இளம் தலைமுறையினர் தயாராக வேண்டும். மற்றவர்கள் முன் இந்தப் பழக்கத்தை ஏற்படும் நிராகரிப்பதும் வீட்டிலிருந்தான் தொடங்க வேண்டும். கற்பிக்கப்பட வேண்டும்''.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.