ரூ.134 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி செய்ததாக டெல்லியில் ஒருவரை கைது மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
டெல்லியைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் விபே ட்ரேடெக்ஸ் நிறுவனம் பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் சிராக் கோயல், பல போலி ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இவர் இங்கிலாந்தில் எம் பி ஏ பட்டம் பெற்றவர்.
சரக்குகளை அனுப்புவதற்காக வாகனங்களுக்கு இ-வே பில்களை உருவாக்கியுள்ளார். இந்த இ-வே பில்கள் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் போன்ற தொலை தூர இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இ-வே ரசீதுகள் டெல்லிக்குள் நுழையவில்லை. இதன் மூலம் ரூ.134 கோடி உள்ளீட்டு வரியாக பெறப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டுக்கு மூளையாக சிராக் கோயல் செயல்பட்டுள்ளார். இவரை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இது தொடர்பாக மேல் விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.