பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இதில் அமரீந்தரின் விருப்பதை மீறி, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் ஒருவரும் கட்சி நிர்வாகிகள் மூவரும் பதவி விலகினர். கட்சித் தலைவராக பொறுப்பேற்ற 2 மாதங்களில் சித்து பதவி விலகியது கட்சி மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்து நேற்று காலை ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், “எனது நெறிமுறைகள் மற்றும் தார்மீகப் பண்புகளுடன் என்னால் சமரசம் செய்துகொள்ள முடியாது. பஞ்சாப் பிரச்சினைகள் மற்றும் செயல் திட்டங்களுடன் ஒரு சமரசத்தை நான் காண்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து முதல்வர் சரண்ஜித் சன்னி நேற்று கூறும்போது, “சித்துவிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது கவலைகள் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன். ‘பேச்சுவார்த்தையில் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. நாம் கலந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம், வாருங்கள்’ என அழைத்தேன். எனது நியமனங்களில் யாருக்கேனும் ஆட்சேபம் இருக்குமானால் அதில் நான் பிடிவாதம் காட்ட மாட்டேன். எனக்கு ஈகோ பிரச்சினை ஏதுமில்லை” என்றார்.