இந்தியா

உத்தராகண்ட்: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் மார்ச் 31-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஹரிஷ் ராவத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தராகண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, பாஜக எம்எல்ஏ.க்களும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்எல்.க்களும் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து, முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், அந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் மார்ச் 28-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, ஹரிஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினார். இதனால் பெரும்பான்மையை நிருபிப்பதற்கான கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாகவே (ஞாயிற்றுக்கிழமை) அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதை எதிர்த்து, ஹரீஷ் ராவத் சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி யு.சி.தயானி, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஹரிஷ் ராவத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.

இந்த வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 9 பேரும் பங்கேற்கலாம் என்றும் இவர்களது வாக்குகள் தனியாக வைக்கப்பட்டு அதை ஏற்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட உடன், இந்த 9 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் பதவி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்கெடுப்பு நடைபெறும்போது உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “குதிரை பேரம் நடைபெற்றதாகக் கூறி வாக்கெடுப்பை நிறுத்தியதையோ, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதையோ நியாயப்படுத்த முடியாது என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது” என்றார்.

உத்தராகண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாகுர் நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹரிஷ் ராவத் கூறும்போது, “நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் தொடர்ந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை. எனினும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசின் முடிவு தவறு என்பதை உணர்த்துவதாக உள்ளது. 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நீதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதை ரத்து செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு செய்தால் உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.

SCROLL FOR NEXT