பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

பான்-ஆதார் கார்டு இணைப்பு காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

ஏஎன்ஐ


பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் இதை 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

பலமுறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு பான்-ஆதார் எண் இணைப்புக்கு மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் “ கரோனா வைரஸ் பரவல் சூழலில் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு, பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு செப்டம்பர் 30ம் ேததி முடிவடைய இருந்த நிலையில் அந்தக் காலக்கெடு 2022ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT