இந்தியா

பெங்களூரு சம்பவத்தில் ராகுல் மவுனம் காப்பது ஏன்?- பாஜக கேள்வி

பிடிஐ

பெங்களூருவில் ஆப்பிரிக்க மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மவுனம் காப்பது ஏன் என பாஜக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

"மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த சம்பவம் நடந்து இரண்டு, மூன்று தினங்கள் ஆகிவிட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தியோ இன்னும் மவுனமாகவே இருக்கின்றனர். அவர்கள் கட்சியே கர்நாடகாவில் ஆட்சி செலுத்துகிறது. அப்படியிருந்தும், ஏன் மவுனம் காக்க வேண்டும்.

சிறிய விஷயங்களைக்கூட பூதாகரமாக்கும் காங்கிரஸ் கட்சியினர் இவ்வளவு பெரிய சம்பவத்தை மூடி மறைப்பது ஏன்? இந்த மவுனத்துக்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மவுனம் ஒரு துக்க சம்பவத்தை ஆதரிப்பதற்கு சமமாகும். பெங்களூரு சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்க வேண்டும்" என முக்தார் அப்பாஸ் நாக்வி கூறியுள்ளார்.

பெங்களூருவுக்கு பெருத்த அவமானம்:

தான்சானியா இளம் பெண் ஆடைகளை களையப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூரு நகருக்கே பெரும் இழுக்கு என பாஜக விமர்சித்துள்ளது. மேலும், இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத கர்நாடக டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சிலரை அரசு உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாநில பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT