அசாமில் பிரம்மபுத்ரா நதியில் 2 படகுகள் மோதி கொண்டதை அடுத்து, தனியார் படகுகளுக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தடை விதித்துள்ளார்.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டம் நிமதி கட் பகுதியில் நேற்றுமுன்தினம் 2 பயணிகள் படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அவற்றில் பயணித்த பொதுமக்கள் நதியில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை மீட்புப் படையினர் மீட்டனர். எனினும் ஒரு பெண் உயிரிழந்தார். காணாமல் போன 2 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பயணிகள் படகுகளுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று தடை விதித்தார். இந்த தடை நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது.
மேலும், அவர் கூறும்போது, ‘‘படகுகள் விபத்து தொடர்பாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும். இந்த விவகாரத்தில் 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட அளவில் தீவிர விசாரணை நடத்தப்படும். மேலும், ஒரு இன்ஜின் கொண்டபடகுகளை மரைன் இன்ஜினாக மாற்றிக் கொள்ள முன்வருபவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்கி அதில் 75 சதவீதம் மானியமாக வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
மேலும், விபத்து நடந்த பகுதியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.-பிடிஐ