இந்தியா

கரோனா தடுப்பூசி; 70 கோடியை கடந்தது: மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி ட்வீட்

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 70 கோடியை கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் மற்றும் விரிவாக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

குறிப்பிடத்தக்க சாதனையாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான (1,13,53,571) கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இது கடந்த 11-நாட்களில் மூன்றாவது முறையாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், 42,942 நோயாளிகள் கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் வீதம் 97.48%.

மத்திய, மாநில அரசின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு, தொடர்ந்து 72 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 31,222 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,92,864. இது மொத்த பாதிப்பில் 1.19 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 15,26,056 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை, 53.31 கோடி (53,31,89,348) பரிசோதனைகளைச் செய்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட் பரிசோதனை திறன் அதிகரித்துள்ள நிலையில், வாராந்திர பாதிப்பு வீதம் 2.56 சதவீதமாக உள்ளது. இது கடந்த 74 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு வீதம், கடந்த 8 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாகவும், தொடர்ந்து 91 நாட்களாக 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாடுமுழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை இன்று மாலை 70 கோடியை கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

‘‘பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் #COVID19 தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 70 கோடியை கடந்துள்ளது.

இந்த சாதனைக்காக அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துக்கள்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT