இந்தியா

சாதி மோதலை தூண்டிய புகார்: சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பாகேல் இன்று கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கு முதல்வராக பூபேஷ் பாகல் உள்ளார். அவரின் தந்தை நந்தகுமார் பாகல் (வயது 86) உத்தரப் பிரதேசத்துக்கு சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது சாதி மோதலைத் தூண்டும் விதத்தில் முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகல் பேசியுள்ளார்.

நந்தகுமார் பாகல் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நான் கூறுவது, உங்கள் கிராமத்துக்குள் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள். நான் மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் பேசுவேன். பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். வோல்கா ஆற்றின் கரைக்கே அவர்கள் அனுப்பப்படுவது அவசியம்” எனக் கூறினார்.

இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில் ‘‘என் தந்தை மீது மரியாதை உண்டு, அதற்காக அவர் செய்த குற்றத்தை முதல்வராக என்னால் மன்னிக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகல் பேசியது குறித்து சத்தீஸ்கர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தநிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பாகேல் இன்று கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் ராய்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT