படம் | ஏஎன்ஐ 
இந்தியா

இந்தியாவில் 167 நாட்களில் இல்லாத அளவு கரோனா தொற்று குறைந்தது: 38 ஆயிரம் பேரில் 26 ஆயிரம் பேர் கேரளாவில் பாதிப்பு

பிடிஐ

இந்தியாவில் கடந்த 167 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கரோனா தொற்று குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 26 ஆயிரம் பேர் கேரளாவில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 38 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேர் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 26 ஆயிரம் பேர் கேரளாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 804 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,174 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 1.23 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 21 லட்சத்து 81 ஆயிரத்து 985 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.44 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 219 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 40 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 48 நாட்களுக்குப் பின் 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை 53 கோடியே 14 லட்சத்து 68 ஆயிரத்து 867 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 649 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 68.46 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT