என் தந்தை மீது மரியாதை உண்டு. அதற்காக அவர் செய்த குற்றத்தை முதல்வராக என்னால் மன்னிக்க முடியாது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கு முதல்வராக பூபேஷ் பாகல் உள்ளார். அவரின் தந்தை நந்தகுமார் பாகல் உத்தரப் பிரதேசத்துக்கு சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது சாதி மோதலைத் தூண்டும் விதத்தில் முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகல் பேசியுள்ளார்.
நந்தகுமார் பாகல் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நான் கூறுவது, உங்கள் கிராமத்துக்குள் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள். நான் மற்ற அனைத்து சமூகத்தினரிடமும் பேசுவேன். பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும். வோல்கா ஆற்றின் கரைக்கே அவர்கள் அனுப்பப்படுவது அவசியம்” எனக் கூறினார்.
முதல்வரின் தந்தை நந்தகுமார் பாகல் பேசியது குறித்து சத்தீஸ்கர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், கைது செய்யவில்லை. இது தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகலிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சட்டம்தான் உயர்ந்தது. மாநில அரசு அனைவருக்கும் பொதுவானது. என்னுடைய 86 வயது தந்தையாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். சத்தீஸ்கர் அரசு ஒவ்வொரு மதத்தையும், சமூகத்தையும், பிரிவினரையும் மதிக்கிறது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக என் தந்தையின் கருத்து சமூக ஒற்றுமையைக் குலைக்கிறது. என் தந்தையின் கருத்தால் நானும் வேதனைப்படுகிறேன்.
எங்களுடைய அரசியல் பார்வைகள், நிலைப்பாடு வேறு. ஒரு மகனாக என் தந்தையை நான் மதிக்கிறேன். ஆனால், மாநில முதல்வராக அவரின் பேச்சுக்கு அவரை மன்னிக்க முடியாது. பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவரை மன்னிக்க முடியாது” என்று முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.