ஆந்திராவில் என்.டி.ராமாராவ் முதல்வராக இருந்தபோது, கோயில் உண்டியல் மூலம் வரும் காணிக்கை பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டியில் பக்தர்களுக்கு அன்னதான திட்டத்தை தொடங்க ஆலோசனை வழங்கினார். இது இன்றளவும் தொடர்கிறது.
தற்போது தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக தினமும் சுமார் ரூ.30 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் அரிசி, பருப்பு உட்பட மளிகை சாமான்கள் அனைத்தும் டெண்டர் முறையில் வரவழைக்கப்படுகின்றன. ஆனால், காய்கறிகள் மட்டும் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 14 நன்கொடையாளர்கள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தினமும் இலவசமாக தேவஸ்தானத்திற்கு வழங்கி வருகின்றனர். இதில் அதிகமாக காய்கறி வழங்குவது தமிழக நன்கொடையாளர்கள்தான்.
தினந்தோறும் சுமார் 70 ஆயிரம் பக்தர்களுக்காக எத்தனை கிலோ காய்கறிகள் உபயோகித்தாலும் அவை அனைத்தும் இந்த 14 பேர் மூலமாகவே இலவசமாக தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை நன்கொடையாளர்களின் ஆலோசனை கூட்டம் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடந்தது. நன்கொடையாளர்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது என தர்மா ரெட்டி கூறினார். பின்னர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டுகளை தெரிவித்தார்.