இந்தியா

பஞ்சாப் கிராமத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

பஞ்சாப் கிராமத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை பாகிஸ்தான் ட்ரோன்கள் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல் துறை இயக்குநர் ஜெனரல் தின்கர் குப்தா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அமிர்தசரஸ் நகருக்கு அருகே உள்ள தலைக் கிராமத்தில் ஒரு பை கேட்பாரற்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அதைத் திறந்து பார்த்ததில், வெடிகுண்டுகள் (ஐஇடி) அடங்கிய ஒரு பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 5 கையெறி குண்டுகள் மற்றும் 9 எம்எம் பிஸ்டலுக்கான 100 ரவைகளும் இருந்தன. அந்த பாக்ஸில் சுமார் 2 கிலோ வெடிமருந்துகள் இருந்தன. ரிமோட் கன்ட்ரோல் கருவி, ஸ்விட்ச் ஆகியவையும் இருந்தன. இந்தப் பை பாகிஸ்தான் எல்லையில் வான் பகுதியில் பறந்த ட்ரோன்கள் மூலம் இந்திய பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இந்த வெடிகுண்டின் தன்மை குறித்து ஆராய தேசிய பாதுகாப்புப் படையின் உதவியை நாடி உள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த ஏதேனும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ

SCROLL FOR NEXT