இந்தியா

முதியோர் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் தமிழகம்: முதலிடத்தில் கேரள மாநிலம்

செய்திப்பிரிவு

'இந்தியாவில் 2021-ம் ஆண்டில் முதியவர்கள்' என்ற தலைப்பிலான ஆவணத்தை மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் தற்போது கேரளமாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள்தொகை யில் முதியவர்களின் பங்கு 16.5சதவீதம். அடுத்த இடத்தில் தமிழகத்தில் முதியவர்களின் அளவு 13.6 சதவீதமாக இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இமாச்சல் (13.1%), பஞ்சாப் (12.6%), ஆந்திரா (12.4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதேபோல, நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பிஹார் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 7.7 சதவீதமாக இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உத்தரபிரதேசம் (8.1%), அசாம் (8.2%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

வரும் 2031-ல் அதிக பட்சமாக கேரளாவில் 20.9 சதவீத முதியவர்கள் இருப்பார்கள். தமிழகத்தில் 18.2%, இமாச்சலில் 17.1%, ஆந்திராவில் 16.4%, பஞ்சாபில் 16.2% என்ற வீதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும் என இந்த புள்ளிவிவர ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அங்கு வளர்ந்த பொருளாதாரம், மருத்துவ வசதிகள் இருப்பதற்கான அறிகுறி கள் ஆகும். அதே சமயத்தில், குழந்தை பிறப்பு விகிதம் குறைவதும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT